இலஞ்சிவேள் மாப்பரவன்
இலஞ்சிவேள் மாபரவன்
கல்வெட்டு 2:1 > நீர்வடி விளிம்பின் கீழ் முதல் கல்வெட்டு உள்ளது. 1971 ல் இது கண்டு அறியப்பட்டது.
நெல்வெளிஈய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன்
சிழிவன் - துணிவணிகன்; முழாகை - கற்படுக்கை, flat stone.
விளக்கம்: நெல்வெளியைச் சேர்ந்த துணி வணிகன் அதினன் வெளியன் என்பான் இக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தான் எனப் பொருள். ஒற்று எழுத்து சேர்த்து கொட்டுப்பித்தோன் எனப் படிக்க வேண்டும்.
கல்வெட்டு 2:2 > நீர்வடி விளிம்பின் மேல் ஒரே வரியில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இது 2003 ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மிக மங்கலாகவும் தேய்ந்தும் உள்ளது.
இலஞ்சிய் எளம் பேராஅதன் மகன் எமயவன் இவ் முழ உகைய் கொடுபிதவன்
விளக்கம்: இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த இளம் பேர்அதன் மகன் இமயவன் என்பவன் இக் கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது பொருள். ஒற்று சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.
இதில் உள்ள பேராஅதன் என்பது பரதன் என்பதாக இருக்கலாம்
கல்வெட்டு 2:3 > செப். 15, 2003 ல் இந்து நாளேடு வெளியிட்ட புதிதாக கண்டறியப்பட்ட மூன்றாவது அரிட்டாபட்டி தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு இது. மெல்லிய கோடுகளால் தெளிவின்றி காணப்படும் இக்கல்வெட்டு 33 எழுத்துகளுடன் 3.10 மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.
இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல்முழாஉகை கொடுபிதவன்
விளக்கம்: இலஞ்சி எனும் ஊரின் வேள் ஆன (அரையன்) மாப்பரவன் மகன் இமயவன் நல்ல கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மாப்பரவன் என்றால் மீனவர் தலைவன். முன்னைய கல்வெட்டில் இவன் பெயர் இளம் பேராதன் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரே செய்தி இரு இடங்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒற்று சேர்த்து கொட்டுப்பித்தவன் எனப் படிக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக